வயிறு சரியில்லை என்றால் அன்றைய நாளே சூனியமாகி விடும். இதில் இருந்து வெளி வந்தால் போதும் என்கிற அளவுக்கு உடலையும், மனதையும் இப்பிரச்சனை சோர்வடைய வைத்துவிடும். வயிறு தொடர்பான உபாதைகளுக்கான நெல் பொரி கஷாயம் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
வயிற்றில் வாய்வு சம்பந்தப்பட்ட தொந்திரவு, வயிறு உப்பிசம் தொடர்பான தொந்திரவு , உணவு வயிற்றில் செரிக்காமல் புளித்த ஏப்பம் வருவது தொடர்பான தொந்திரவுகள்…. இதெல்லாம் ஏற்பட்டது என்றால் இதிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று குழப்பத்தோடு இருப்பவர்களை பார்க்கிறோம். இது போல பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய கைமருந்துதான் நெல் பொரி கஷாயம். வீட்டிலேயே நாம் இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் சூரணம், சீரகம் சூரணம், திப்பிலி சூரணம்,அஜீரணத்தைப் போக்கக் கூடிய நெற்பொரி
மேற்கண்டவைகளை தலா 3 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். 300 மிலி தண்ணீரில் இவைகளை போட்டு, அடுப்பில் வைத்து 100ம் மிலி தண்ணீராக வற்றி வரும்வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் எடுத்து வடிக்கட்டி, காலை ஒரு வேளை உணவுக்கு முன்பு, இரவு ஒரு வேளை உணவுக்கு முன்பு என்று பருகி வந்தால் வயிற்றுப் பிரச்சனைகள் முற்றிலுமாக குணம் அடையும். .
நெல் பொரி கஷாயத்தின் மருத்துவ குணங்கள்
நெல்பொரி கஷாயத்தை பொறுத்தவரை மிக முக்கியமாக வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு தருகிறது. கோடை காலத்தில் பித்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், வாந்தி என்று அவதிப்படுவார்கள். வயதானவர்கள் மிகப்பெரிய அளவில் இந்த பாதிப்புக்கு ஆளாவார்கள். வெளியில் உணவு சாப்பிட்டு இதனால் வயிற்றில் பிரச்சனை, கல்யாண விருந்து போன்ற விசேஷங்களில் சாப்பிட்டு அஜீரண கோளாறு, புளித்த ஏப்பம் வருதல், வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் என்று அவதிப்படுவார்கள். வாந்தி, தலை சுற்றல் மயக்கம் போன்றவற்றை நிற்க வைக்கக் கூடிய அருமருந்து இந்த நெல்பொரி கஷாயம்.
முதலில் மலச்சிக்கல் அடுத்து பேதி
சிலருக்கு மூன்று நாட்கள் மலச்சிக்கல், அடுத்த மூன்று நாட்களுக்கு பேதி என்கிற நிலைமையில் அவதிப்படுவார்கள். மலம் கழிக்க முடியவில்லை என்று மருந்து எடுத்துக்கொண்டால், பேதியாகிவிடும். பேதியாகிறதே என்று மருந்து எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் வந்துவிடும். மிக முக்கியமான பதவியில் இருக்க கூடிய உயர் அதிகாரிகள், நேரம் காலம் பார்த்து வேலை செய்யக்கூடிய இளைய தலைமுறையினர், ஆகியவர்கள் இப்படியான பிரச்சனை இருக்கிறது. இதை எப்படியாவது சரி செய்து விடுங்கள் என்று வருவார்கள். அவர்களுக்கு இந்த நெல்பொரி கஷாயத்தை செய்து சாப்பிட சொல்லி, அவர்களும் சாப்பிட்டு பயன் அடைந்ததாக கூறி இருக்கிறார்கள்.
குடல் தொடர்பான அறுவை சிகிச்சை அதாவது குடல் புண், குடல் ஏற்றம், வயிற்றில் வாயு எலி மாதிரி ஓடிக்கொண்டே இருக்கிறது என்று வாய்வு பிரச்னை போன்ற எல்லாவற்றுக்கும் நெல் பொரி கஷாயம் தீர்வு தருகிறது.குடல் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், தங்களது மருத்துவரிடம் மலச்சிக்கலுக்கு மருந்து வாங்கி சாப்பிட்டும் பயன் இல்லை என்று வருவார்கள். அவர்களுக்கு இந்த மூலிகை நெல்பொரி தேநீர் நல்ல மருந்து.