இந்த பூண்டு மிகப்பெரிய மருத்துவ குணங்களைக் கொண்டது.இதில் வரும் வாசனை பிடிக்காமல் பலரும் இதை சாப்பிடத் தயங்குவார்கள். சிலர் இதை எப்படி மருந்தாக சாப்பிடுவது என்று தெரியாமல், காலையில் வெறும் வயிற்றில் நாலு பூண்டு பல் சாப்பிட்டேன் என்று சொல்வார்கள். பூண்டு அப்படி எல்லாம் சாப்பிட்டால் தனது மருத்துவ குணத்தை நமது உடலுக்கு தராது.
பூண்டு கொழுப்புடன் சேர்ந்தால்தான் மருத்துவ குணம்….
பூண்டு உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களின் சமையலறையிலும் இருக்க கூடிய ஒரு பொருள். இதன் மருத்துவ குணம் பற்றி ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. பூண்டின் மூலக்கூறுகள் மருந்தாக இப்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. பூண்டில் இருக்கும் சல்பர் என்று சொல்லக்கூடிய கந்தகம் தோல் நோய்களை நீக்கக்கூடிய மருந்தாக இருக்கிறது. கொழுப்பை கரைக்க, இதய நோய் வராமல் தடுக்கவும் பூண்டில் இருந்து எடுக்க கூடிய மூலக்கூறுகளை மருந்தாக கொடுக்கிறார்கள். உடலில் ஏற்படும் வலி போன்ற நிறைய பிரச்சனைகளுக்கு பூண்டு மிகப்பெரிய அரு மருந்தாக இருக்கிறது. பூண்டு இதை எப்படி மருந்தாக சாப்பிட வேண்டுமென்பது பலருக்கும் தெரிவதில்லை. வழக்கமாக சமைத்து சாப்பிடுவது போன்றும் சாப்பிடலாம். மருந்தாக சாப்பிடும்போது, பூண்டு கொழுப்புடன் சேர்ந்தால்தான் உடலுக்கு மருத்துவ பலனைத் தரும். இல்லாவிட்டால், அது எந்தவித பயனும் இல்லாமல் உடலில் கரைந்து, வெளியேறிவிடும். எண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் மருத்துவ குணம் தெரியும். அப்படி இல்லாமல், பூண்டு பால் செய்தும் சாப்பிடலாம்.
பூண்டு பால் செய்வது எப்படி?
100 மிலி தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பூண்டு விழுதை சேர்த்து, இத்துடன் 50 மிலி பாலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் வற்றி பால் மட்டும் பூண்டில் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கி வைத்துவிட வேண்டும். இந்த பூண்டு பால் ஆறியவுடன் இதில் தேன் சேர்த்து காலை உணவுக்கு முன், இரவு உணவுக்கு முன் என்று அருந்த வேண்டும். அப்போதுதான் பூண்டின் மருத்துவ குணம் முழுமையாக உடலில் சேரும்.
பூண்டு பால் மகிமையை அறிவோம்…
பூண்டு பால் இடுப்பு நரம்பு நோயை குணப்படுத்தும். கடிக்கிரகம் என்று சொல்லக்கூடிய முதுகுத் தண்டு சவ்வு விலகல், அதாவது இந்த கடிக்கிரகம் முதுகுத் தண்டில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். அதோடு முதுகை சுற்றி இருக்கும் தசைகள் இறுக்கமாக மாறி, தரையில் நடக்கும்போது பிரச்சனை இல்லாமல் இருக்கும். ஒரு படிக்கட்டு ஏறினாலும் முதுகுத் தண்டிலிருந்து பிட்டம் வழியாக கால்களை சுண்டி இழுப்பது போல் பொறுக்க முடியாத வலியை உண்டாக்கும். இந்த மாதிரியான சயாடிக்கா பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய அருமருந்தாக இந்த பூண்டு பால் இருக்கிறது. உடல் பருமன், உடலில் கொழுப்பு சேர்ந்து இருப்பது, பெண்களுக்கு மாதவிடாய் கால சூதக வலி போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த பூண்டு பால் அருமருந்தாக செயல்படுகின்றது. பூண்டு உணவாகவும் பயன்படுத்தக்கூடிய ஒன்று, மருந்தாகவும் பயன்படுத்தக்கூடிய ஒன்று.. இரண்டு வகையிலும் பூண்டு சாப்பிட்டு முழுமையான மருத்துவ பயன்களை பெறலாம்.